Followers

Followers

Friday 28 October 2016

தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க,
      புது துணி உடுத்தி,  மகிழ்ச்சியுடன்
     இந்நாளை நீங்கள் கொண்டாட,
     என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

 “நல்ல எண்ணங்கள்” என்ற
       தீப விளக்கை ஏற்றி வைத்து ,
     “இருள்” என்ற தீமையை அழிப்பதே
    தீபாவளி! என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

கிரிவலம்....காஞ்சி பெரியவா.(10).நிறைவு...

வந்தது முப்பது மூட்டை அரிசிங்கறதை யாருமே மகா பெரிவா கிட்டே சொல்லலை. அது மட்டுமல்லாம, அன்னதானம் பண்ணணும்னு ஆசார்யா நேரடியா யார்கிட்டேயும் சொல்லலை. சொப்பனத்துல வந்த காட்சியை வைச்சுதான் பாதிராத்திரியில தீர்மானமே பண்ணினாங்க. இதெல்லாம் எப்படி அவருக்கு தெரிஞ்சுது? இதையெல்லாம்விட புரிஞ்சுக்கவே முடியாத புதிர் என்ன தெரியுமா? சமைச்ச முப்பது மூட்டை அரிசி ரொம்ப சரியா கிரிவலம் வந்த கடைசி நபருக்குக் குடுத்ததோட தீர்ந்துடுத்து. அதுக்கப்புறம் யாரும் வலமும் வரலை. அன்னமும் மீறலை.

கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கார்ங்கறது அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது. தெய்வம் அசரீரியாவோ கனவுல வந்தோ பேசும்னு சொல்லுவாளே, அதேமாதிர பரமாசார்யாளும் தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்ங்கறதையும் உணர முடிஞ்சது.

Thursday 27 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா.(9)..

எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை. தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். "முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!' சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.

Wednesday 26 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா..(8)..

அன்னதானத்துக்கு ஆசார்யாளோட அனுகிரகம் கிடைச்சுடுத்துங்கறதைப் புரிஞ்சுண்டு மளமளன்னு அடுப்பைப் பத்தவைச்சு சமையலைத் தொடங்கினா எல்லாரும் உளுந்தும் சர்க்கரையும் கிடைச்சுட்டதால ஜாங்கிரியும் சேர்த்துத் தரலாம்னு தீர்மானிச்சு பண்ண ஆரம்பிச்சுட்டா.

எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை. தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். "முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!' சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.

Tuesday 25 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா..(7)..

அதுல இருந்து இறங்கிவந்த ஒருத்தர், "என்ன ஆச்சர்யம்! எல்லாரும் தூங்கிண்டு இருப்பேள்னு நினைச்சேன். முழிச்சுண்டு இருக்கேளே... நான் பக்கத்து ஊர்க்காரன். பரமாசார்யா பிடி அரிசித் திட்டத்தை அறிவிச்சதுல இருந்து எங்க ஊர்க்காரா எல்லாரும் அதைத் தட்டாம செஞ்சுண்டு இருக்கோம். மூணுமாசமா சேர்த்த அரிசியை காஞ்சிபுரத்துல கொண்டு வந்து தரலாம்னு நினைச்சுண்டு இருந்தப்போ, ஆசார்யா இங்கேயே முகாம் போட்டிருக்கான்னு தெரிஞ்சுது. அதான் இங்கேயே கொடுத்துடலாம்னு கொண்டு வந்தேன்' சொல்லிவிட்டு அரிசி மூட்டைகளை இறக்கிவைக்க ஆரம்பிச்சார்.

கிட்டத்தட்ட முப்பது மூட்டை அரிசியோட சர்க்கரை, உளுந்தும் இறக்கிவைச்சார். அதெல்லாமும் சிலர் குடுத்ததா சொன்னார். "விடியற்காலம்பறவே எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதனால ஆசார்யாகிட்டே என்னோட வந்தனத்தை சொல்லிடுங்கோ, நான் புறப்படறேன்'னு சொன்னவர் பதிலுக்குக்கூட காத்துண்டு இருக்காம புறப்பட்டுப் போயிட்டார்.

Monday 24 October 2016

கிரிவலம்.....காஞ்சி பெரியவா.(6)..

அவ்வளவுதான் எல்லாரும் எழுந்துண்டுட்டா. கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணறது. அதுவும் இனிப்போட தர்றதுன்னு தீர்மானிச்சா. ஆனா, பரிசாரகர் சொன்ன ஒரு விஷயம் அவாளை யோசிக்க வைச்சுது. முகாம்ல கொஞ்சமே கொஞ்சம்தான் அரிசி இருக்கு. அதைவைச்சுண்டு, எப்படி லட்சக்கணக்கானவாளுக்கு அன்னதானம் பண்ண சமைக்கறதுன்னுதான் கேள்வி எழுப்பினார் அவர்.

அந்த அர்த்தராத்திரியில எங்கேயும் போய் அரிசி கேட்கவோ, வாங்கிண்டு வரவோ வசதி கிடையாது. அன்னதானம் பண்ணணும்னா, விடியற்காலம்பறவே சமையல் பண்ணிடணும் அதனால என்ன செய்யறதுன்னு அவா யோசிச்சுண்டு இருந்தப்போ, முகாமோட வாசல்ல மாட்டுவண்டி ஒண்ணு வந்து நின்றது

Sunday 23 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா..(5)..

பெரியவா என் சொப்பனத்துல வந்து, "நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே... அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?'ன்னு கேட்டார்னு சொன்னார்.

உடனே இன்னொருத்தர், "எனக்கும் அதேமாதிரி கனவு வந்துது. பண்டிகை, நாள் நட்சத்திரம்னாதான் இனிப்புப் பண்டமெல்லாம் பண்ணணுமா? அன்னதானத்துலயும் இனிப்புப் பலகாரத்தை சேர்த்துக் குடுத்தா, பாவம் ஏழைகள் சந்தோஷப்படுவா இல்லையா?' எப்படின்னு பெரியவா சொல்றமாதிரி இருந்துது.

Saturday 22 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா..(4)..

ஒருதரம் மார்கழி மாசம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு பர்வத மலையை வலம் வரணும்னுட்டு முதல்நாளே போய்பக்கத்துல முகாம் போட்டுட்டா பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம்பேர் கிரிவலம் பண்ணுவா. அதனால விடியற்காலம்பற மூணு மணிக்கே பிரதட்சணம் பண்ண ஆரம்பிச்சுடணும்னு தீர்மானிச்சார், ஆசார்யா.

அதுக்கப்புறம் பெரியவா கூட வந்த சிப்பந்திகள் எல்லாரும் போஜனம் பண்ணிட்டு தூங்கப் போயிட்டா. பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார்.

கிரிவலம்...காஞ்சி பெரியவா..(3)..

பௌர்ணமியில திருவண்ணாமலையில கிரிவலம் போறமாதிரி பர்வத மலையை மார்கழி மாசம் ஒண்ணம்தேதி பிரதட்சணம் பண்றது சுத்துவட்டாரத்துல உள்ள கிராமத்து மக்களோட வழக்கம். பரமாசார்யா எப்போல்லாம் அந்தப் பக்கமா போறாரோ அப்போல்லாம் அந்த மலையை பிரதட்சணம் பண்ணிடுவார். தோராயமா முப்பத்தஞ்சு, முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் சுத்திவர வேண்டியது இருக்கும். ஆசார்யா கூட போறவாள்லாம், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடப்பா. ஆனா, பெரியவா வழக்கமா சாதாரணப் பாதையில நடக்கறதைவிட ரொம்ப வேகமா, அதேசமயம் கொஞ்சமும் தடுமாறாம அந்த மலைப்பாதையில நடப்பார்.

Thursday 20 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா..(2).

சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட அம்சமாவே வாழ்ந்த பரமாசார்யாளும் அப்படித்தான். எப்பவும் எல்லாரும் நன்னா இருக்கணும். யார் யாருக்கு என்னென்ன தேவையோ அதை தேவை அறிஞ்சு பண்ணணும்கறதையே எப்பவும் சிந்தனையா வைச்சுண்டு இருந்தார்.

திருவண்ணாமலைக்குப் பக்கத்துல காஞ்சி கடலாடின்னு ஒரு கிராமம் இருக்கு. சிங்கம், புலி எல்லாம்கூட உலாவிண்டு இருந்துது. பக்ல்லயே அங்கே போறது ரொம்ப சிரமம். அந்த இடத்துக்குப் பக்கத்துல பெரிய மலைகள் எல்லாம் இருக்கு. அந்த மலைகள்ல ஒண்ணுல பரமேஸ்வரனும், ஈஸ்வரியும் கோயில்கொண்டிருக்கா. அந்த மலைக்குப் பேரு பர்வதமலை. சுவாமி, மல்லிகார்ஜூனர். அம்பாள் பிரமராம்பிகை.

கிரிவலம்.... காஞ்சி பெரியவா... (1)

தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல 
வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!"

(பர்வத மலை கிரிவலம் சம்பவத்தில் நடந்த அற்புதம்)

நன்றி-.2014 மே மாத குமுதம் பக்தி

சர்வேஸ்வரன் சகல ஜீவராசிகளுக்கு படியளக்கறவர். சதா சர்வ காலமும் அவரோட நினைப்பெல்லாம் லோக ரட்சணம் பத்திதான் இருக்கும்னு புராணங்கள் எல்லாம் சொல்றது

Tuesday 11 October 2016

விஜய தசமி

*வெற்றியை உணர்த்தும் விஜயதசமி !*

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் 9 நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரி.
நவம் என்றால் ஒன்பது. அந்த வகையில் அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள், மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.
மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றதையே இந்த நாள் குறிக்கிறது.
விஜய் - வெற்றி; தசமி - பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
கொல்கட்டா போன்ற வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜயதசமி அழைக்கப்படுகிறது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

எனவே விஜய தசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று பொருள்படும்.
குழந்தைகளுக்கு விஜயதசமி தினத்தன்று ஆரம்பக் கல்வியை இந்த நாளில் ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.
தவிர, உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் கொண்டாடப்படுகிறது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விழாவாகவே தசரா பண்டிகை திகழ்கிறது. மைசூருவில் நடைபெறும் தசரா பண்டிகை ரத ஊர்வலத்தைக் காண இந்தியா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவார்கள்.
மைசூரு தசரா பண்டிகையைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகப் புகழ்பெற்றது. அங்குள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் இந்த பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.

Saturday 8 October 2016

நவராத்திரி நாயகியர் (6).. நிறைவு..

பட்டாரிகை' என்று பெரிய ஸ்ரீவித்யோபாஸகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் 'பிடாரி' என்று சொல்லிப் பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் 'பட்டாரிகா மான்யம்' என்பதைப் 'பிடாரிமானியம்' என்று திரித்துக் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம்.

இவ்வாறே கிராம ஜனங்களும்கூட ஸரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். 'பேச்சாயி, பேச்சாயி' என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி ஸரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.

அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதிதேவியையும் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக !!!

Thursday 6 October 2016

நவராத்திரி நாயகியர் (5)..

சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால், நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர்ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம் காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்தமாக ஆவோம். குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அநுக்கிரகத்தைச் செய்வாள்.

குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். 'காத்தாயி' என்று சொல்கிற கிராம தேவதை காத்யாயனிதான் என்று நினைக்கிறேன்

Wednesday 5 October 2016

நவராத்திரி நாயகியர் (4)

லோக மாதாக்களாக இருக்கப்பட்ட தெய்வங்களைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால், ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும் குரோதமும் துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த க்ஷணத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. கோபமும் இப்படியே சுவடு தெரியாமல் நிமிஷத்தில் மறைந்து போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை ஆழ உள்ளுக்கு வாங்கிக்கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் 'குழந்தையாய் இரு' என்கிறது.

நவராத்திரி நாயகியர் (3)

மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்கு பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.

'பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா' எனறு ஸம்ஸ்கிருத அகராதியான 'அமர கோசம்' சொல்லும். இப்படியே காத்யாயன மகரிஷி சாக்ஷாத் பரமேசுவரியைப் பெண்ணாக அடைய வேண்டும் என்று விரும்பித் தபஸ் செய்தார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்குப் பெண் என்பதாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. துர்க்கைக்கு உரிய காயத்ரியிலே அவளைக் 'காத்யாயனியாக தியானிக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறது

Monday 3 October 2016

நவராத்திரி நாயகியர் (2)

ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியானதால் மலைமகள். மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். ஸரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.

பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.

நவராத்திரி நாயகிகள்----(1)

நவராத்திரி நாயகியர்

நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ - ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ - கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ - ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் 'பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:' என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:' என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்க்கையாக இருக்கிறபோது, வீரம், சக்தி எல்லாம் தருகிறது. மஹாலக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது. ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறது.

Wednesday 28 September 2016

பூதம் காட்டிய புண்ணிய வழி..





பூதம் காட்டிய
-----------------------------------
புண்ணியவழி
-----------------------------
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து,

பச்... சாமியாவது ஒண்ணாவது... என்று சலித்துக் கொள்வது,

ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து, ஜோசியமே பொய்... என்று புலம்புவது,

பொழுதை எல்லாம் வீணாகப் போக்கி, நமக்கெல்லாம் எங்கே நல்ல காலம் வரப் போகுது...

என்று, விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின் இயல்பு.

சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக வாழ ஆசைப்படுகிறோம்.

கார் ஓட்டத் தெரியா விட்டாலும், போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்வது போல்,

மகான்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதன் மூலம்

மனதில் அமைதி ஏற்படும்.

எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ.

தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின்,

மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர் வழக்கம்.

இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது.

திடீரென்று ஒருநாள், ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி,

"  ராம பக்தா...

குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும், என் தாகம் தீரவில்லை;

இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால், என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது.

என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்... " என்றது.

"  ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்...  " என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.

பூதமோ,  " அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடைபெறுகிறது;

அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார், மாருதி.

அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்...  ' என்று சொல்லி மறைந்தது.

ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல் ஆளாக வந்து,

அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக வெளியேறுவார் ஆஞ்சநேயர்.

பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ,

முதியவர் வடிவில் அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து,

அவர் அருகில் அமர்ந்தார்.

ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.

தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ.

வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன், முதியவரும் வெளியேறத் துவங்கினார்.

கூடவே, ராம்போலோவும் புறப்பட்டார்.

விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.

சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார்.

அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார், ராம்போலோ.

உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.

அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.

கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய வடிவத்தை காண்பித்து,

" ராம்போலோ... உன் விடாமுயற்சியும், தீவிர பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன; வேண்டியதைக் கேள்... " என்றார்.

" அஞ்சனை மைந்தா... அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்படுகிறேன்..." என்றார்.

ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு தரிசனம் தந்து,

' பக்தா... என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்... ' என்று ஆசி கூறி, மறைந்தார்.

ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார்.

பக்தி மயமான அந்நூல், ராம் சரிதமானஸ் எனப்பட்டது.

இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர்!

விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக வந்து தரிசனம் அளிக்கும்.

Saturday 10 September 2016

சில கேள்விகள் பதில்கள்..



மகாபாரதத்தை படிக்கும் போதும் சிலர் சொல்லும் சமயம் கேட்கும் போதும் நம் மனதில் விடை கிடைக்காத சில கேள்விகள் வரும். இதுபோல சில கேள்விகளும் அதற்கான பதில்களும்...

1. சந்தனு மனைவி கங்கை என்றால் சிவனின் தலை மீது அமர்ந்திருக்கும் கங்கை யார்?

2. ராமாயணத்தில் தோன்றும் பரசுராம அவரதாரம் எவ்வாறு மகாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர முடியும்?

3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள்? எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர்? வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை?

4. விதுரன் மகன்கள் யார் யார்?

5. கிருஷ்ணனுடைய குழந்தைகள் யார் யார்? அவர்களைப் பற்றிய எந்த வரலாற்றையும் ஏன் காண இயலவில்லை?

6. காந்தாரியுடைய நூறு மகன்கள் எந்த முறையில் உயிர் பெற்றனர், எந்த முறையில்வியாசர் கையாண்டார்?

7. பீஷ்மருக்குத் தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தைச் சந்தனுவால் எவ்வாறு தர இயலும்?

8. இறுதியாகக் கடைசி கேள்வி. தீபாவளி பண்டிகை ராமாயணத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் மகாபராதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்களா?

இந்த எட்டு கேள்விக்கு உரிய பதில்கள்
_______________________________

1. சந்தனுவின் மனைவி கங்கை எனில் சிவன் தலை மீது இருக்கும் கங்கை யார்?

* பதில்:

ஓடும் நீரான கங்கைக்கும் சந்தனுவின் மனைவி கங்கைக்கும் உள்ள் தொடர்பு உடல்-ஆன்ம தொடர்பாகும். சந்தனுவின் மனைவியான கங்கை மனித உடலில் இருந்த ஆன்ம கங்கை ஆவாள்.
சிவன் தலையில் கங்கையைத் தாங்கியது கங்கை விண்ணில் இருந்து மண்ணில் பாய்ந்தபோது. கங்கை சிவனின் தலையில் விழுந்து வேகம்தணிந்து மண்ணில் இறங்கினாள்.

ஈரசடையுடன் முடிந்து கொண்டதால் கங்கை சிவன் தலையில் கட்டப்பட்டாள். இது கங்கையின் ஸ்தூல வடிவம்.
தென்னாட்டில் கங்கை சிவனின் மனைவி என்று கதை சொல்லப்பட்டாலும் கங்கைக்கும் சிவனுக்கும் ஒரு போதும் திருமணம் நடக்கவில்லை. விண்ணிலிருந்து மண்ணிற்கு பாய்ந்த கங்கையை சிவன் தலையில் தாங்கி சடைகளின் வழியே மெல்ல வழிந்தோட விட்டு அதன் வேகத்தைக் குறைத்தார். அவ்வளவே.

அதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்கையைக் கட்டிக் கொள்ளவில்லை.
அனைத்து நதிகளுக்கும், மலைகளுக்கும், கோள்களுக்கும் ஸ்தூல வடிவமும் ஆன்ம வடிவமும் உண்டு. அதே போல் தேவர்களுக்கும் உண்டு,
மனிதன் ஒருவன் ஒரு ஆன்மா என்பது நமக்கு தெரியும்.

ஆனால் நதிகள், தேவர்கள், தெய்வங்கள் ஆகியவை தம் அம்சங்களை ஆன்மாக்கள் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.
உதாரணமாக கார்த்தவீர்யார்ச்சுனன் விஷ்ணுவின் ஒரு அம்சம் கொண்டவன். பரசுராமர் இன்னொரு அம்சம் கொண்டவர். இராமன், இலக்குவன், பரதன் சத்ருக்கனன் ஆகியோரும் விஷ்ணுவின் அம்சம். கிருஷ்ணனும் பலராமனும் விஷ்ணுவின் அம்சம்.

ஆக ஒரே நேரத்தில் பல அம்ச அவதாரங்கள் உருவாவதும், ஒன்றை ஒன்று அழிப்பதும் கூட சொல்லப்பட்டே இருக்கின்றன. இதில் இராமனும், கிருஷ்ணனும் முழு அவதாரங்கள். அவர்கள் விஷ்ணுவின் பெரும்பாலான அம்சங்கள் கொண்டு பிறந்தனர். மற்றவர்கள் உப அவதாரங்கள் எனப்படுவர். ஆக தெய்வங்கள் தன் ஆன்ம சக்தியை அம்சங்களாக பிற ஆன்மாக்களின் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.

அப்படி அம்சங்கள் கொண்டு பிறக்கும் பிறவியை உப அவதாரம் என்கின்றன புராணங்கள்.அதாவது கங்கையின் அம்ச வடிவம் ஒரு பெண்ணாக வந்தது. இன்றும் ஸ்தூல நதியாக கங்கை ஓடிக் கொண்டுதான் இருந்தது. கங்கை நதியே கங்கா மாயா, கங்கா மாதா, கங்கா தேவியாக வணங்குகிறோம்.
_______________________________

2. இராமாயணத்தில் தோன்றும் பரசுராமர் அவதாரம் எவ்வாறு மஹாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர இயலும்?

* பதில்:

புராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள்

1. பரசுராமர்
2. ஜாம்பவான்
3. அனுமான்
4. விபீஷ்ணன்
5. மஹாபலி
6. மார்கண்டேயர்
7. அசுவத்தாமன்

இவர்களில் அசுவத்தாமனைத் தவிர மற்ற எல்லோருமே இராமயணம் மற்றும் அதற்கு முற்பட்டவர்கள்.

பரசுராமர் பீஷ்மர், கர்ணன் ஆகியோருக்கு குரு, துரோணருக்கு ஆயுதங்கள் வழங்கியவர். கேரளாவின் மலைக்குகையில் இன்னும் வாழ்ந்திருப்பதாக ஐதீகம்.

ஜாம்பவான் இவர் மகள் ஜாம்பவதியை கிருஷ்ணன் மணந்து அவள் மூலம் சாம்பன் என்ற மகனைப் பெற்றார். இவன் கர்ப்பிணி வேஷம் தரித்ததால் துர்வாசரின் சாபம் பெற்றனர் யாதவர்கள்.

அனுமான் பீமனுக்கு பயிற்சி அளித்தார். அர்ச்சுனனின் கொடியில் அமர்ந்தார். எங்கெங்கு இராம கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இருப்பதாக ஐதீகம்.

விபீஷ்ணன் மஹாபாரத காலத்திலும் இலங்கை அரசனாக இருந்தான். இராசசூய யாகத்திற்கு பரிசுகள் அனுப்பினான்.

வாமன அவதாரம் மூலம் அசுர குணம் நீங்க பெற்ற மஹாபலி பாதாள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்,

மார்கண்டேயர், முக்திக்காக கலியுக முடிவை எதிர்னோக்கி தவம் செய்துகொண்டிருக்கிறார்.(சில தினங்களுக்கு முன் அவரை பற்றி பதிவிட்டிருந்தேன்)

அசுவத்தாமன், சிரோண்மணி பறிக்கப்பட்டு குரூர ரூபம் கொண்டு இமயமலைச் சாரல்களில் அலைந்து கொண்டிருப்பதாக நம்பிக்கை.

எனவே இவர்கள் அனைவருமே வைவஸ்வத மன்வந்தரம் முடியும் வரை இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
பரசுராமர் பரம்பரையையும் பீஷ்மரின் பரம்பரையையும் அறிந்தால் அவர்கள் ஒரு வகையில் தூரத்து சொந்தம் கூட என அறிவீர்கள்.
_______________________________

3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள். எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர்? வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை?

* பதில்:

உருவாகும் முறை தாம்பத்யம் தான். ஆனால் ரிஷிபிண்டம் இராத்தங்காது. தேவர்கள் – ரிஷிகள் ஆகியோரால் உண்டாகும் கர்ப்பம் ஒரு இரவிற்குள் குழந்தையாக பிறக்கும் என்பது லாஜிக். அப்படித்தான் வியாசர் ஒரே இரவில் பிறந்தார்.
கர்ணனும் பாண்டவரும் அப்படி ஒரே இரவில் பிறந்தவரே.

வியாசருக்கும் – அம்பிகாவுக்கும் த்ருதராஷ்டிரன் முதல் நாள் இரவு பிறந்தான். இரண்டாம் நாள் இரவு வியாசருக்கும் – அம்பாலிகாவுக்கும் பாண்டு பிறந்தான். மூன்றாம் நாள் இரவு வியாசருக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் விதுரன் பிறந்தான்.

இது பூரணமான தாம்பத்ய உறவு என்பதாலேயே அம்பிகா அருவெறுப்பில் கண்களை மூடிக் கொண்டாள். அம்பாலிகா பயத்தில் உடல் வெளுத்தாள். பணிப்பெண் அர்ப்பணிப்புடன் இருந்தாள்.

இதனால் சொல்லப்படும் நீதி தாம்பத்ய உறவு கொள்ளும்போது அன்பு, நற்சிந்தனை போன்றவை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே.அது மட்டுமின்றி பரசுராமர் காலத்தில் இந்த நியதி உண்டானது. தேவர்களாலும், ரிஷிகளாலும் உண்டாகும் கர்ப்பங்களுக்கு தாலிகட்டிய கணவனே தந்தையாக கருதப்படுவான்.

வியாசர் குழந்தைகள் உருவாகவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளை காண ஞான த்ருஷ்டியை வழங்கவும் செய்த வியாசர் ஏன் த்ருதராஷ்டிரருக்கு பார்வை வழங்க இயலவில்லை.

ரிஷிகளோ தேவர்களோ விதியை என்றுமே மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. அதில் ஈடுபடுவதால் அவர்களின் சக்தி விரயமாகவே செய்யும். தங்களின் பணியைத் தவிர வேறு எதிலும் அவர்கள் தலையிட மாட்டார்கள்.

அசுரர்களும் மிகச் சிறப்பான தவங்களைச் செய்தவர்களே. அவர்கள் தங்கள் தவப்பயனை விதியை மாற்றுவதில் செலவிட்டதாலேயே அவர்களின் தவப்பயன்கள் எல்லாம் வீணாகின. பலன் கருதா தவம் செய்ததால் ரிஷிகள் உயர்ந்தனர். பலன் கருதி தவம் செய்தவர் அதை மட்டுமே பெற்றனர்.

த்ருதராஷ்டிரன் பிறந்தபோதே பீஷ்மரோ, சத்யவதியோ இந்த வேண்டுகோளை வைத்திருக்கலாம். ஆனால் வியாசர் மிக இலாவகமாக அதைத் தட்டிக் கழித்தார்.

வியாசர் வெளியேவந்த போது சத்தியவதி வியாசரை சந்தித்து "இளவரசி அம்பிகா பிள்ளையைப் பெறுவாளா?" என்று கேட்டாள்.

அதை கேட்ட வியாசர் "இளவரசி அம்பிகை பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரச முனியாக இருந்து, பெரும் கல்வியும் புத்தி கூர்மையும் சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவான். ஆனால் அவனது தாயின் அம்பிகையின் தவறால் அவன் குருடாகப் பிறப்பான்." என்று வியாசர் பதிலுரைத்தார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, "ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவன் குருக்களின் ஏகாதிபதியாகும் தகுதியை எப்படிப் பெறுவான்? குருடாக இருப்பவனால் தனது உறவினர்களையும் குடும்பத்தையும் தனது தந்தையின் குல கௌரவத்தையும் எப்படி காக்க முடியும்? நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்." என்றாள்.

வியாசர் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சென்று விட்டார். மூத்த இளவரசி அம்பிகா சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள். குருடாக வாழ்வது அவனது விதி என வியாசர் நாசூக்காக சொல்லி விடுகிறார். அதை மாற்றினால் அவரது சொல் பொய்த்து விடுமே. அதனால் யாரும் அதை மாற்றக் கேட்கவும் இல்லை.

த்ருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்வுகளைக் கேட்க சஞ்சயனுக்கு ஞானத்ருஷ்டி வழங்கியது த்ருதராஷ்டிரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே பலர் கருதுகிறார்கள். தன் மகன் செய்த அக்ரமங்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்தவன் தன் மகன் அழிவையும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்க்க வேண்டியதாகப் போய்விட்டது.

த்ருதராஷ்டிரன் போர் தொடங்கும் போது மட்டுமல்ல.. போர் தொடங்கிய பின்னரும் கூட துரியோதனனை இழக்கச் சம்மதித்திருந்தால் (அதாவது துரியோதனனைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தால் – துரியோதனன் தற்கொலை செய்து கொண்டிருப்பான் அல்லது கர்ணன் துணையுடன் போராடி மடிந்திருப்பான்) மிகப் பெரிய அழிவு தடுக்கப்பட்டிருக்கும்.

த்ருதராஷ்டிரன் கடைசி வரை பலமிருந்தும், பலமும் அறிவும் மிக்கோர் துணையிருந்தும், தன் மகனின் சந்தோஷத்தைத் தவிர வேறு எதையும் அவன் காண விரும்பவில்லை. நன்றாக ஊன்றிக் கவனித்தோமானால், சாபங்களினாலும் இன்னும் பிற பாதிப்புகளாலும் உண்டான குறையை மற்றுமே ரிஷிகள் மாற்றி இருப்பதைக் காணலாம்.

விசுவாமித்திரர் விதியை மீறி திரிசங்குவை சொர்க்கத்துக்கு ஸ்தூல உடலோடு அனுப்ப முயன்று, திரிசங்கு சொர்க்கம் படைத்து தன் தவப்பலனை இழந்தார். எனவே விதியை மாற்றும் சக்தி இருந்தாலும் அதை மாற்றாமல் அடக்கத்துடன் இருப்பவர்களே ரிஷிகளாக இருக்கவே முடியும்.
_______________________________

4. விதுரனின் மகன்கள் யார் யார்?

* பதில்:

ஒரு ஒரு வேற்று ஜாதி பெண்ணுக்கும் மன்னன் தேவகனுக்கும் பிறந்து அழகும் இளமையும் கொண்ட பெண்ணொருத்தி இருப்பதாக கங்கையின் மைந்தன் பீஷ்மர் கேள்விப்பட்டார்.

அவளது தந்தையின் தேவகனின் இருப்பிடத்தில் இருந்து அவளைக் கொண்டு வந்த பீஷ்மர் அவளை, ஞானியான விதுரனுக்கு மணமுடித்தார். விதுரர் அவளிடம் தன்னைப் போல வேத திறமை கொண்ட பல பிள்ளைகளைப்ப
பெற்றெடுத்தார்.

மற்றபடி விதுரனின் வம்சம் அரச வம்சம், ரிஷி வம்சம் அல்ல என்பதால் அவர்களின் பெயர்கள் புராணங்களில் இடம் பெறவில்லை. எத்தனை பேர் என்பதும் குறிப்பிடப்படவில்லை.
_______________________________

5. கிருஷ்ணனின் மகன்கள் யார் யார்? அவர்களைப் பற்றி எந்த வரலாறும் ஏன் காண இயலவில்லை?

* பதிவில்:

கிருஷ்ணன்-ருக்மணி மகன் பிரத்யும்னன், அவனுடைய மகன் அனிருத்தன்
கிருஷ்ணன் ஜாம்பவதியின் மகன் சாம்பன் இவர்களின் குறிப்புகள் மகாபாரதத்தில் உண்டு.

கிருஷ்ணனுக்கு மொத்த மனைவியர் 16108. அவர்கள் ஒவ்வொருவருவருக்கும் பத்து குழந்தைகள் பிறந்த்தாக புராணம் சொல்கிறது. ஆக மொத்தம் 1,61,080 குழந்தைகள்.
கிருஷ்ணரின் முக்கிய மனைவிகள் எட்டு பேர். அவர்களின் மகன்கள் பெயரே அறியத்தருகிறது பாகவத புராணம். இவர்களில் மூத்தவன் பிரத்யும்னன். மன்மதன் அம்சம்.

ருக்மணியின் மகன்கள்:
1. பிரத்யும்னன்
2. சாருதேசனன்
3. சுதேஷனன்
4. சாருதேஹன்
5. சுசாரு
6. சாருகுப்தன்
7. பத்ரசாரு
8. சாருசந்திரன்
9. விசாரு
10. சாரு.

சத்தியபாமையின் மகன்கள் :
11. பானு
12. சுபானு
13. சுவபானு
14. பிரபானு
15. பானுமான்
16. சந்த்ரபானு
17. பிரஹத்பானு
18. அதிபானு
19. ஸ்ரீபானு
20. பிரதுபானு.

ஜாம்பவதியின் மகன்கள் :
21. சாம்பன்
22. சுமித்ரன்
23. புருஜித்
24. சதாஜித்
25. சஹரஸ்ரஜித்
26. விஜயன்
27. சித்ரகேது
28. வசுமானன்
29. த்ராவின்
30. க்ருது.

நக்னஜித்தின் மகள் சத்யாவின் மகன்கள் :
31. வீரன்
32. சந்திரம்
33. அஸ்வசேனன்
34. சித்ராகு
35. வேகவான்
36. விருஷன்
37. ஆம்
38. சங்கு
39. வசு
40. குந்தி.

காளிந்தியின் மகன்கள் :
41. சுருதன்
42. கவி
43. விருஷன்
44. வீரன்
45. சுபாகு
46. பத்ரா
47. சாந்து
48. தர்ஷன்
49. பூர்ணமாஷ்
50. சோமகன்

லக்ஷ்மணையின் மகன்கள் :
51. பிரபோதன்
52. கத்ரவான்
53. சிம்ஹன்
54. பலன்
55. பிரபலன்
56. ஊர்த்துவகன்
57. மஹாசக்தி
58. சஹன்
59. ஓஜா
60. அபராஜித்.

மித்ரவிந்தையின் மகன்
61. விருகன்
62. ஹர்சன்
63. அனிலன்
64. க்ருத்ரன்
65. வர்தன்
66. அன்னாடன்
67. மஹேசன்
68. பாவன்
69. வன்ஹி
70. க்சுதி

பத்ராவின் மகன்கள் :
71. சங்க்ரமஜித்
72. ப்ருஹத்சன்
73. சூரப்
74. ப்ரஹாரன்
75. அரிஜித்
76. ஜெயன்
77. சுபத்ரன்
78. வாமன்
79. ஆயு
80. சாத்யகன்

இவர்களில் பிரத்யும்னன் வரலாறும், பேரன் அனிருத்தன் வரலாறும் பாகவத புராணத்தில் கிடைக்கும். சால்வன் துவாரகையை தாக்கியபோது பிரத்யும்னன் சால்வனுடன் போர் செய்தான். சாம்பன், சாருதேசனன் ஆகியோரும் போர் செய்தனர். சாம்பனைப் பற்றி அவன் துர்வாசரின் சாபம் பெற்ற கதை மகாபாரதத்தில் கிடைக்கும். மற்றபடி இவர்கள் அனைவரும் அழிந்ததால் வரலாறு கிடையாது.
_______________________________

6. காந்தாரியின் நூறு குழந்தைகள் எந்த முறையில் உயிர்பெற்றனர்? எந்த முறையில் வியாசர் கையாண்டார்?

* பதில்:

இன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்பகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது.

நாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி, இரத்தம் வெளியாகிறதல்லவா அதில் இந்த ஸ்டெம் செல்கள் இருக்கும். அதை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உண்டாக்கிக் கொள்ளலாம்.

வியாசரின் முறையும் இதுபோன்ற ஒரு முறையாகவே விவரிக்கப்படுகிறது.
அதாவது வியாசர், தாயின் கர்ப்பப்பை போன்று 101 பானைகளை தயார் செய்கிறார்.

அவற்றில் கருவளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலைகைகளையும் மருந்துகளையும் சேர்க்கிறார். கருவளர்ச்சிக்குத் தேவையான ஆக்சிஜன், புரதங்கள் மற்ற இதர சத்துக்களை அந்த மருந்துகள் உருவாக்குமாறு செய்கிறார். இதனால் மாமிசபிண்டமாகக் கிடந்த ஸ்டெம்செல்கள் தனித்தனிக் குழந்தைகளாக முழுவளர்ச்சியை எட்டின.
இன்று விஞ்ஞானம் இதை செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருக்கிறது.

ஆனால் தாயின் வயிற்றைப் போல குழந்தை வளர நம்மால் இன்குபேட்டர் தயாரிக்க முடிந்தது. குறைமாதக் குழந்தைகளை அங்கே வைக்கிறோம். அடுத்த நிலை கரு வளர்ச்சிக்கான சக்திகளை தொப்புள்கொடி மூலம் குழந்தைக்கு அளிப்பதாகும். அதன் ஆய்வு நடந்தாலும் வாடகைத் தாய்மார்கள் கிடைப்பதால் மருத்துவர்கள் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை.
_______________________________

7. பீஷ்மருக்கு, தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தை சந்தனுவால் எவ்வாறு தர இயலும்?

* பதில்:

இக்ஷவாகுகுலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் அஸ்வமேத யாகங்களையும் நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவன். இவனே பிரம்மனின் சாபத்தால் சந்தனுவாகப் பிறக்கிறான்.

அதுவுமின்றி கங்கை அவனை விட்டு நீங்கியபின் அவன் முப்பத்தாறு வருடங்கள் பல வேள்விகள், அறப்பணிகள் செய்கிறான். இவற்றால் அவனுடைய தவ வலிமை கூடுவதால் அவனுக்கு வாக்குபலிதம் உண்டாகிறது.

கற்புக்கரசிகள், மஹாதவம் செய்யும் ரிஷிகள், தேவர்கள், வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் ஆகியோருக்கும் வரமும் சாபமும் தர இயல்கிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும். (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கட்டிப்பிடி வைத்தியம் இங்கிருந்து எடுக்கப்பட்டதே)
_______________________________

8. இறுதியான கேள்வி. தீபாவளிப் பண்டிகை இராமாயணத்தில் இருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்படி என்றால் மஹாபாரதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார்களா?

* பதில்:

மஹாபாரத காலத்தில் தீபாவளி கொண்டாடும் வழக்கம் இருந்ததாக ஒரு பதிவும் எங்கும் இல்லை. எந்த ஒரு சுபகாரியங்களுக்கும் தீபங்களால் வீடுகளை, தெருக்களை அலங்கரிக்கும் வழக்கம் மாத்திரமே இருந்திருக்கிறது.

தீபாவளி கொண்டாடும் பழக்கம் சமண மதம் வேரூன்றிய பின் தொடங்கிய பழக்கமாகும். மகாவீரர் மறைந்ததை ஒட்டி தீபம் ஏற்றி வீடுகளில் வைக்கும் பழக்கம் தொடங்கப்பட்டது. இந்துக்கள் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் தமதாக்கிக் கொள்வார்கள்.

அதே நாள் இராமன் அயோத்தி திரும்பிய நாளாக கருதப்பட்டதால் இந்துக்களும் அதைக் காரணமாக்கி அதை இந்துத் திருநாளாக மாற்றினர். பின்னர் பாகவத புராணத்தின் நரகாசுரன் கதையின் அடிப்படையில் தமிழகத்தில் தீபாவளி இன்னொரு அவதாரம் எடுத்தது.


Tuesday 23 August 2016

ஸ்ரீ.கிருஷ்ண ஜெயந்தி




ஆன்மிக செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

1- கிருஷ்ண ஜெயந்தி விரதமுறை!

*காலை முதல் நள்ளிரவு வரை விரதம் இருத்தல் வேண்டும். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம்.

*கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய் பண்டங்களை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

*பதினாறு வார்த்தைகள் அடங்கிய ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
*பகவத் கீதை படிக்க வேண்டும்.

*கோவிலுக்குச் சென்று கிருஷ்ணரை பிரார்த்திக்க வேண்டும்.

2- சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்..

அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் போதித்த கீதோபதேசக் கருத்துகள் இங்கு இடம் பெற்றுள்ளன.

*உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டவும், நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் இந்த பூமியில் மனிதனாக அவதரிக்கிறேன். நீயும் தர்மத்தைக் காக்க துணிந்து நில்.

*எல்லா உயிர்களின் இதயத் தாமரையில் கிருஷ்ணனாகிய நானே வீற்றிருக்கிறேன். எனது சக்திக்கு கட்டுப்பட்டு உயிர்கள் அனைத்தும் பொம்மை போல ஆட்டுவிக்கப்படுகின்றன.

*பச்சிலை, மலர், தண்ணீர் எது வேண்டுமானாலும் அன்புடன் எனக்கு அளித்தால் போதும். அவர்களின் அன்பை ஏற்றுக் கொண்டு அருள்புரிய தயாராக இருக்கிறேன்.

*குரு என்னும் திறமையான மாலுமியும், தெய்வீக அருள் என்னும் காற்றும் சாதகமாக இருந்து விட்டால், பிறவிக்கடலை எளிதாக ஒருவனால் கடந்து விட முடியும்.

*மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தும், என்றாவது ஒருநாள் பிறப்பு, இறப்பு இரு நிலைகளையும் கடந்தே ஆக வேண்டும். இதுவே வாழ்வின் குறிக்கோள்.

*கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி மூலம் ஆன்மிக வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.

*மனம் போல போக்கில் மனிதன் வாழ்வது கூடாது. புலன்களுக்கு அடிமைப்பட்டவன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான். பகுத்தறிவால் நன்மை, தீமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

*ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, புலன்களை புத்தியால் அடக்க வல்லவன் ஞான நிலையை அடைய முடியும்.

*மனிதப்பிறவி மகத்தானது. அதனால் தேவர்களும் மண்ணில் பிறப்பெடுத்து அன்பு நெறியில் வாழ்ந்து உயர்ந்த ஞானம் அடைய விரும்புகின்றனர்.

*நேர்மை, பணிவு, பொறுமை, சேவை மனப்பான்மை, மனத்தூய்மை, தன்னடக்கம் ஆகிய நற்பண்புகள் அறிவுடையோரின் அடையாளங்களாகும்.

*தேனீக்கள் பல பூக்களில் இருந்து தேனைச் சேகரிப்பது போல மனிதன் பல வழிகளிலும் நற்பண்புகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

*உணவு, உறக்கம், உழைப்பு அனைத்திலும் மிதமாக இருப்பவனே சிறந்த மனிதன். அடங்காத முரட்டுக் குதிரையான மனதை அடக்கும் வல்லமை அவனிடம் மட்டுமே இருக்கும்.

*வேலையின்றி கணப்பொழுதும் சும்மா இருக்க கூடாது. அவரவர் கடமையைச் சரிவர செய்ய வேண்டும். செயலற்று இருந்தால் உடலைப் பராமரிப்பது கூட சிரமமாகி விடும்.

*செய்யும் கடமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், பலனைப் பற்றிய சிந்தனை உண்டாகாது. அப்போது தான் மனிதன் சுதந்திரமாக வாழ முடியும்.

*அளவான பேச்சும், உணவில் கட்டுப்பாடும் இருந்து விட்டால் மனிதன் தன்னை அறியும் அறிவைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான்.

*நாடாளும் மன்னராக இருந்தாலும் பெரியவர்களைக் கண்டால் வணங்குவது அவசியம். மனப்பூர்வமாக பெரியவர்களுக்குச் சேவை செய்தால் அகந்தையை வெல்ல முடியும்.

*கொழுந்து விட்டு எரியும் தீ, கட்டைகளை எரித்து சாம்பலாக்குவது போல என்னிடம் முழுமையாகச் சரணடைந்தால் பாவம் அனைத்தும் முற்றிலும் அழிந்து போகும்.

3- வசுதேவர் – தேவகி பொருள் என்ன?

கிருஷ்ணரை பெற்ற தந்தை வசுதேவர். வசு என்ற சொல்லுக்கு எங்கும் பரவியிருப்பது என்று பொருள். எங்கும் பரவியிருக்கும் தேவனான கிருஷ்ணரைப் பெற்றதால் அவர் வசுதேவர் என பெயர் பெற்றார். கிருஷ்ணரின் தாய் தேவகி. இதற்கு தெய்வீகம் எனப்பொருள். ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்ததால் இந்தப் பெயர் பெற்றாள்.

4- விடாக்கண்டன் கொடாக்கண்டன்!

அவரவர் கருத்தில் உறுதியாக நிற்பவர்களை விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்பார்கள். பாரதப்போரில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இப்படி பேசிக்கொண்டனர். தன் எதிரே நிற்கும் பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட குருமார்களையும், உறவினர்களையும் எதிர்த்து போராட முடியாது என அர்ஜுனன் கிருஷ்ணரிடம் சொல்லி விட்டான். அப்படியானால் உன் பெயரான விஜயன் (வெற்றியாளன்) என்பதை இழக்க வேண்டி வருமே என்றார் கிருஷ்ணன். போனால் போகட்டும் என்ற அர்ஜுனனிடம், “அப்படியானால் நீ இழந்த நாட்டை மீட்க முடியாது. உன் சுகமெல்லாம் போய் விடுமே! என்றதும், அதுவும் போகட்டும் என்றான் அர்ஜுனன். தன் வழிக்கு வராத அர்ஜுனனிடம்,“சரி...உன் சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே! என்று கிருஷ்ணர் சொல்லவும், “எங்களுக்குள் அப்படி கருத்து வேறுபாடே வராது. நான் சொல்வதை மற்றவர்கள் நிச்சயம் ஏற்பார்கள், என்றான் அர்ஜுனன். சரி...நீ என்ன தான் சொல்ல வருகிறாய்? என்று கிருஷ்ணன் கேட்கவும், “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உனக்கு தெரியாதாக்கும். சரியான ஆளாக இருக்கிறாயே! என் மனதில் மட்டுமல்ல...ஊரில் எல்லார் மனதிலும் என்ன இருக்கிறது என்று அறிந்த நீயா இவ்வளவு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று மடக்கி விட்டான் அர்ஜுனன். ஆம்...எல்லாம் அறிந்த கிருஷ்ணர் நம் மனதில் இருப்பதையும் அறிவார். அதனால் நாம் நல்லதையே நினைப்போம்.




Thursday 18 August 2016

ஸ்ரீ.பலராமர் அவதாரம்..

ஶ்ரீ பலராமர் அவதாரம்

(இன்று 18-08-2016 ஶ்ரீ பலராமரின் அவதார தினம்)

தேவகி மற்றும் வசுதேவரின் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கம்சன் கொலை செய்தான். தேவகி ஏழாவது முறையாக கர்ப்பவதியான போது கிருஷ்ணரின் வியாபகமான அனந்தர் தேவகியின் கர்ப்பத்தில் தோன்றினார். தேவகி மிகுந்த மகிழ்ச்சியும், அதே சமயத்தில் வியாகுலமும் அடைந்தாள். அதே சமயம் குழந்தை பிறந்ததும் கம்சன் அதைக் கொன்று விடுவானோ என்பதில் வருத்தம்.

யோகமாயை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பிரதான சக்தியாகும். அவருக்கு பல்வேறு சக்திகள் உண்டென்று வேதங்கள் கூறுகின்றன. "பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே" பல்வேறான சக்திகள் உள்ளும் புறமுமாக இயங்குகின்றன. எல்லா சக்திகளுக்கும் தலையாயது யோகமாயை எனும் சக்தி. எக்காலமும் அலங்கரிக்கப்பட்டிருப்பதும் அழகிய பசுக்கள் நிறைந்ததுமான விரஜபூமியில், விருந்தாவனத்தில் தோன்றுமாறு ஶ்ரீ கிருஷ்ணர் யோகமாயைக்கு கட்டளையிட்டார். விருந்தாவனத்தில் நந்தமகாராஜாவும் யசோதா ராணியும் வசித்த இல்லத்தில் வசுதேவரின் மனைவியருள் ஒருத்தியான ரோகிணி வசித்து வந்தாள். ரோகிணி மட்டுமின்றி, யதுகுல வம்சத்தைச் சேர்ந்த பலர் கம்சனின் கொடுமைகளுக்கு அஞ்சி நாட்டின் பல பாகங்களில் சிதறிப்போயிருந்தனர். அவர்களில் சிலர் மலைக் குகைகளிலும் கூட வசித்தார்கள்.

பிரபுவான கிருஷ்ணர் யோகமாயைக்கு இவ்வாறு கூறினார் : "தற்போது கமசனின் சிறையில் தேவகியும் வசுதேவரும் உள்ளனர். தேவகியின் கர்ப்பத்தில் என் முழு வியாபகமான சேஷன் இருக்கிறான். சேஷனை நீ தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வாயாக. இதன் பிறகு நான் எனது முழு சக்தியுடன் தேவகியின் கர்ப்பத்தில் தோன்றப் போகிறேன். அப்போது நான் தேவகி மற்றும் வசுதேவரின் மகனாகத் தோன்றுவேன். நீ விருந்தாவனத்தில் நந்தனுக்கும் யசோதைக்கும் மகளாகப் பிறப்பாயாக."

தனது வெளிப்பாடான அனந்தர் தேவகியின் கர்ப்பத்தில் இருந்ததை கிருஷ்ணர் யோகமாயைக்கு கூறினார். தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு பலவந்தமாக இழுக்கப்பட்டதால் "சங்கர்ஷணர்" என்று அழைக்கப்பட்டு, "ரமணம்" எனப்படும் உன்னத ஆனந்தத்தை தரவல்ல ஆன்மீக பலத்தை உடையவர் அவர். எனவே அனந்தர் தோன்றிய பிறகு அவர் சங்கர்ஷணர் என்றும் பலராமர் என்றும் அழைக்கப்பட்டார்.

"நாயம் ஆத்ம பல ஹினேனலப்ய" என்று உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. பலராமரின் போதிய உதவியின்றி ஒருவன் பரம்பொருளையோ வேறு எவ்விதமான ஆத்மானுபவத்தையோ பெற முடியாதென்பது இதன் கருத்து. பலம் என்றால் உடல் பலம் அல்ல. உடல் பலத்தால் யாரும் ஆத்ம பலம் பெற இயலாது. பலராமர் எனும் சங்கர்ஷணர் அளிக்கும் ஆத்மபலத்தின் உதவியால் தான் ஒருவன் ஆத்ம ஞானம் பெறவியலும். அனந்தர் எனும் சேஷர் எல்லாக் கிரகங்களையும் அவற்றின் நிலைகளில் நிலைபெற செய்துள்ளார். பௌதிக விஞ்ஞானம் இதை புவியீர்ப்பு சக்தி என்று அழைக்கிறது. உண்மையில் இது சங்கர்ஷணரின் பலத்தால் நிகழ்வதே. பலராமர் எனும் சங்கர்ஷணர் ஆன்மிக பலம் தரும் மூல ஆன்மீக குரு ஆவார். எனவே பலராமரின் அவதாரமான நித்தியானந்த பிரபு மூல ஆன்மீக குரு ஆவார். ஆன்மீக குரு முழுமுதற் கடவுளாகிய பலராமரின் பிரதிநிதி. அவரிடமிருந்து ஆன்மீக பலம் பெறப்படுகிறது.

"ஸ்ரீ பலராமன் திருவடிகளே சரணம் "

பூணூல் மஹாத்மியம்

பூணூல் மகாத்மீயம்  பற்றி ஒரு சிறுகதை

 { காயத்ரி மந்திரத்தின் பெருமை  }

உபநயனம் என்றால் என்ன

உபநயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல் என்றபொருளில் வரும்.

உப என்றால் அருகே என்றும் நயன என்பது அழைத்துச் செல்வது என்றும் பொருள் கொடுக்கும்.

இந்த உபநயனம் என்பது பூணூல் கல்யாணம் என அழைக்கப் பட்டு மிகச் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடக்கும் ஒரு விழாவாக மாறி விட்டது.  

அந்தணர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், மன்னர்கள் முதலானவர்களுக்கும் உபநயனம் உண்டு.

ஒரு காலத்தில் எல்லாருமே பூணூல் தரித்திருந்தனர்.

எல்லாவற்றிலும் மாறிய நம் கலாசாரம் இதிலும் மாறிவிட்டது.

வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.

இதில் 96 இழைகள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது.

சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.

இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை.

இந்தப் பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர்.

அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.

அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.

இதை ஒரு சிறுகதை மூலம் முதலில் பார்ப்போம்.

ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.

கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும்.

ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.

அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார்.

என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.

அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான்.

சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான்.

அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர்.

என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா?

ஆம்;  பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.

அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும்.

ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.

ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த  பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே.

என்ன செய்யலாம்?

காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?

அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.

மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான்.

அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது.

இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான்.

பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.

அவ்வளவு தானே!

நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

மன்னன் நகைத்தான்.

ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான்.

பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது.

மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது.

தராசும் பத்தவில்லை.

பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.

மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.

சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.

நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார்.

கலக்கத்துடன் சென்றார் பிராமணர்.

இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது.

மன்னன் பொருள் தருவானா மாட்டானா?

ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்?

அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே?

நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ?

அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா?

குறைத்துவிடுவானோ?

பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா?

அதை வைத்து என்ன என்ன செய்யலாம்?

பிராமணரின் மனம் அலை பாய்ந்தது.

அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.

காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார்.

பூணூலைச் செய்ய ஆரம்பித்தார்.

வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை.

தடுமாறினார்.

ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.

அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.

அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன்.

என்ன ஆச்சரியம்?

பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?

சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று.

பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று.

அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.  

பிராமணர் அங்கிருந்து  சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே.

சாதுவும் கூட.

இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.

தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார்.

வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.

அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்;

அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.

ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை.

ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை.

அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.”  என்றான் மந்திரி....👌

Thursday 11 August 2016

வரலஷ்மி விரதம்


வரம் தரும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வரலட்சுமி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விரதம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°

சாருமதி தன் கணவன், மாமனார், மாமியார் ஆகியோருக்கு வேண்டிய

பணிவிடைகள் செய்வதையே தம் நோக்கமாகக் கொண்டவள்.

வறுமையிலும் பெருமையாக வாழ்வை நடத்தியவள் சாருமதி.

அதனால் அவளிடம் வறுமையே வறுமை அடைந்தது என்று கூற வேண்டும்!

எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறைவனை வணங்கி வந்தாள் சாருமதி.

அவளது பண்பாட்டை எண்ணி மகிழ்ந்த மகாலட்சுமி தாயார்,

சாருமதி சகல செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட அருள்புரிந்தார்.

சாருமதியின் கனவில் தோன்றிய அன்னை மகாலட்சுமி,

"சாருமதி! உன் சிறப்பான பக்தி என் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.

ஆவணி மாதம் பூர்வபட்ச பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று,

என்னை பூஜித்து வழிபாடு செய்வாய்.

அதனால் சகல செல்வங்களும் பெறுவாய்'' என்று வாழ்த்தினார்.

அலைமகளாம் திருமகள் கூறிய விரதமே ஸ்ரீ மகாலட்சுமி விரதமாக மலர்ந்தது.

அலைமகள், கனவில் கூறியவாறு வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டாள் சாருமதி.

வரலட்சுமி விரதம் இருந்ததின் பயனாக,

பதினாறு செல்வங்களையும் பெற்று மகிழ்ந்த சாருமதி,

அந்த விரதத்தை பிற பெண்களும் செய்திட வழிகாட்டினாள்.

கைலாய மலையில் ஒருநாள், சிவபெருமானும் உமா தேவியும்

சொக்கட்டான் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

"  சொக்கட்டான் விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்!'' என்றார் சிவபெருமான்.

ஆனால் உமா தேவியோ, "இல்லை.. இல்லை.. நானே வென்றவள்'' என்றார்.

சிவனும் உமையும் ஆடிய சொக்கட்டான் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த

சித்ரநேமி என்ற கந்தர்வனிடம்,

"வெற்றி பெற்றவர் யார் என்பதை நீயே கூறவேண்டும்''

என்று பணித்தார் சிவபெருமான்.

சித்ரநேமி ""சிவபெருமானே வெற்றி பெற்றவர்'' என்று கூறினான்.

சித்ரநேமி பொய்யாக தீர்ப்புக் கூறியதாக எண்ணி,

"சித்ரநேமி கொடுமையான பெருநோய் பெறட்டும்''

என்று சாபமிட்டார் உமா தேவி.

தன்னை மன்னித்து தனது பெருநோய் நீங்கிடச் சாப விமோசனம் அருளுமாறு வேண்டினான் சித்ரநேமி.

சிவபெருமானும் உமாதேவியிடம் சித்ர நேமிக்காக அருள்புரியுமாறு கேட்டுக்கொண்டார்.

உமாதேவியும் சிவனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

" அன்பான நல்லொழுக்கமுள்ள மாதரசிகள் வரலட்சுமி பூஜை செய்வதைப் பார்க்கும்போது உன் பெருநோய் நீங்கிடும்!''

என்று அருள்புரிந்தார் உமாதேவி.

உமாதேவியின் அருள்படி, வரலட்சுமி விரதம் அனுசரிக்கும் பெண்களைக் கண்டு

தம் தொழுநோய் நீங்கப்பெற்றான் சித்ரநேமி.

நோய் நொடிகள் நீங்கி, நீண்ட ஆயுள் பெறவும் அனைத்துச் செல்வங்களும் பெற்றுக் குடும்பம் செழிக்கவும்,

திருமணத்தடை நீங்கி திருமணம் நிகழவும், பிள்ளைச் செல்வம் பெறவும்

பெண்களால் பெண்கள் நலனுக்காக மலர்ந்ததே வரலட்சுமி விரதமாகும்.

சூதமா முனிவர், பிற முனிவர்களுக்கு பவிஷ்யோத்ர புராணத்தைக் கூறி உபதேசித்தார்.

இந்தப் புராணத்தில் வரலட்சுமி விரதத்தின் மகோன்னத மாண்புகள் கூறப்பெற்றுள்ளன.

அஷ்டலட்சுமிகளையும் மனதில் எண்ணி,

அவர்களின் பிரவேசம் குடும்பத்தில் நிகழ்ந்திட

பெண்கள் நோற்கும் அற்புதமான விரதம் என்றும் இதைக் கூறலாம்.

அழகன் முருகன் அவதாரம் எடுத்திட இந்த வரலட்சுமி விரதத்தைத் தானே மேற்கொண்டு,

முதன் முதலாகத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவர் பார்வதி தேவி.

சிரவண மாதம், பூர்வபட்சத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.

அதாவது, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக் கிழமையில்

இந்த வரலட்சுமி நோன்பை நோற்க வேண்டும்.

காலமாற்றத்தால் ஆடிமாதத்திலும் ஸ்ரீ வரலட்சுமி விரதம் நிகழ்வதும் உண்டு.

இவ்வாண்டு, 12.8.2016 வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Wednesday 10 August 2016

கருடா கருடா


ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து கேட்டார் "இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா...?" என்று.

அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார் "மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு" என்றார்.

மகாவிஷ்ணு "என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.

"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்...? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை...? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்று கூறினார் கருடன்.

"அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம்" என்றார் மகாவிஷ்ணு.

கருடன் சொன்னார்
"பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.
மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர் அவ்வளவு தான் மகா பிரபு" என்றான்.

மகாவிஷ்ணு சும்மா விடுவாரா !!! "சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார்.

சொல்ல துவங்கினார் கருடன்
"முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் எப்படியென்றால் ...
பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்...

இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப் பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும் வரை அவ்வளவு தான்.

இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்...
பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.

அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.

மூன்றாவது கணவனும் மனைவியும் எப்படியென்றால்...
முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு அவனைக் கவர்ந்து தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான், பிரசவத்திற்கு அனுப்பி விட்டு இவனும் பின்னாலேயே செல்கிறான்.

அது போல ஒரு சாரார் உன்னை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு உன்னை காண முற்படும் வேளையில், உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் சோதிக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய் நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம் ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர் என்றார் கருடன்.

மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடனை வாழ்த்தி தன்னுள் ஏற்றுக் கொண்டார்...


Sunday 7 August 2016